Wednesday, July 8, 2009

என்று வாழப்போகிறாய் மானத்துடன் மனித இனமாய்...!?


இறுகிப்போன இதயத்தில்

அருகிப்போன குருதி.

தேங்கி நிற்கிறது -நாங்கள் இங்கு

ஏங்கி நிற்கையில்.

தேக்கிய தண்ணீரில்

தீர்ந்து போனது

உன் தாகம் மட்டுமல்ல

மனித நேயமும் தான்.

மணமோடு வாழாவிட்டாலும்

பிணமாக வாழ்ந்தெதைக் கண்டாய்?

சினமும் சீற்றமும்

பிணத்துக்கும் வருமோ?

தண்ணீர் கேட்டால்

வேதனையில் வெந்நீர் ஊற்றும்

வெற்றுக் களிமண் நீ!

தொற்று நோயாய்

எங்கள் வாழ்வில்!

என்றென்றும் வாலாட்டும்

வானரமாய்!

நாளெல்லாம்

நச்சரிக்கும் நரி நீ!

வரிந்து கட்டிக்கொண்டு

நிற்கிறாய் மானம் இழந்து!

இனத்திற்கு மானமுண்டு

பிணத்திற்கு மானமுண்டோ?

என்று வாழப்போகிறாய்

மானத்துடன் மனித இனமாய்...!?

No comments: