வடிவேலு: வாங்கய்யா உங்கள பேட்டி எடுக்க சொல்லி வலை உலகத்தில கேட்டுக்கிட்டாக வந்து கொடுங்கய்யா கொடுங்க?
கமல்ஹாசன் : அய்யா என்று அழகு தமிழில் அழைத்தமைக்கு நன்றி, அய்யா என்றழைக்காமல் கமல்ஹாசன் என்றழைத்தாலே சந்தோசப்பட்டிருப்பேன்.அதற்காக நீங்கள் அய்யா என்று அழைத்ததற்கு மகிழ்ச்சி இல்லை என்று நான் சொல்லமாட்டேன்.கம்பராமாயணத்தை புரிந்துகொண்ட தமிழர்களுக்கு இது புரியாதா என்ன. நீங்கள் சொல்லும் வலை உலகம் அறிவியலின் குழந்தை அதை யாரும் தடுக்க முடியாது என்பதுதான் உண்மை.ஆனால் உலகமே ஒரு வலை அதை அறிவியலால் தடுக்கமுடியாது.
வடிவேலு: கம்பராமாயணம் நான் படிச்சதில்லை, ஆனா நீங்க சொல்றது எனக்கு புரிஞ்ச மாதிரியே இருக்கு, உங்க படம் மருதநாயகம் என்ன ஆச்சு?
கமல்ஹாசன் : தேவர் மகனில் நான் உங்களை நடிக்க அழைக்கும்போது உங்களை இசக்கியாக பார்த்தேன், மருதநாயகம் கண்டிப்பாக வரும், உங்களை பார்த்தவுடன் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது, 23ம் புலிகேசி, இந்திரலோகம் போன்ற படங்களில் நடித்த உங்களை ஹீரோவாக வைத்து அந்த படத்தை எடுக்கலாம் என்றிருக்கிறேன், உங்களின் எட்டு வருட கால்ஷீட் அதற்கு தேவைப்படலாம். டைரக்டர் பாலாவும் நானும் இணைந்து இயக்கும் எண்ணமும் உள்ளது.
வடிவேலு: (மனதிற்குள்) இவருக்கு நம்ம மேல இவ்ளோ கோபம்.ஒருவேளை விஜயகாந்த் மூலமா எதுவும் சதி நடக்குதோ.
ரொம்ப நன்றி கமலய்யா ஆனா எனக்கு ஹீரோ வேசமெல்லாம் வேண்டாம்யா ஹீரோயினியோட ஒரேயொரு குத்து டான்ஸ் மட்டும் வெச்சு ஒரு காமெடி ரோல் மட்டும் போதும்யா சம்பளம் கூட வேண்டாம், அப்புறம் மருதநாயகம் படத்துல விஜயகாந்த ஹீரோவா போட்டு ஒரு பத்து வருடம் வெளிநாட்டுல சூட்டிங் வெச்சுக்கிட்டா உங்களுக்கு புண்ணியமா போகும்யா?
கமல்ஹாசன் : உங்களின் திறமையை நீங்கள் இன்னும் உணரவில்லை என்று நான் எண்ணவில்லை வியாபாரிகளின் சினிமாவில் நீங்கள் ஒரு விட்டில்பூச்சி, இதை நான் சொல்வதால் நான் விட்டில்பூச்சி இல்லை என்று அர்த்தம் கொண்டால் அது என்னுடைய தவறல்ல.
வடிவேலு: (மனதிற்குள்)பார்த்திபன் என்னை வேற மாதிரி குழப்புனாரு,ஆனா இவரு தெளிவா பாராட்டியே குழப்புறாரே.
அய்யா உங்களுக்கும் கவுதமிக்கும் பிரச்சினைன்னு?
கமல்ஹாசன் : நான் என் வீட்டில் ஜன்னல் வைத்திருப்பது நான் காற்று வாங்கவும், நான் வெளி உலகத்தையும் பார்க்கவுமே நீங்கள் எட்டிப்பார்ப்பதற்கு அல்ல, இப்படி என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்வி தேவையில்லாதது இது உங்களுக்கும் பொருந்தும் மற்றவர்களுக்கு பொருந்தாது என்று பொருள் அல்ல.வெளிநடப்பு செய்கிறார்.
வடிவேலு: அய்யா நான் தேவர்மகன் படத்துல உள்ள சீன பத்திதானே சொன்னேன் அதுக்கு ஏன்யா கோபபடுறீங்க, நான் ஒரு கைப்புள்ள அடித்தவங்க விசயத்திலெல்லாம் தலையிட மாட்டேன்யா..............
No comments:
Post a Comment